@ இன்று (02-09-2020) காலையில் நான் பார்த்த பதிவுகளின் படி ராஜேஷ் ஆயிரம் மணி நேர வாசிப்பு சவாலில் வெற்றிகரமாக ஆயிரம் மணி நேர இலக்கைக் கடந்து சாதனை புரிந்திருக்கிறார். அவருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!சுரேஷ் பிரதீப்புக்கு அதை விட அதிக வாழ்த்துக்கள்!
@ ராஜேஷ் 900 மணி நேரத்தைக் கடந்தவுடன் அவரை வாழ்த்தும் போது சிக்ஸரும்,பவுண்டரியுமாக விளாசி முடியுங்கள் என்று நான் குறிப்பிட்டேன். அவர் தனக்கு டெஸ்ட் மேட்ச் தான் பிடிக்கிறது என்றார்.மெதுவாகவே இலக்கு நோக்கி நகர்ந்தார்.ஆனால் கடைசி நேரத்தில் போட்டியில் தீ பற்றத் தொடங்கியது.
@ சுரேஷும்,ராஜேஷும் அருகருகே இருந்தனர். 996 மணியில் இருவரும் அசைவற்று நின்று விட்டனர்.”நீங்கள் முதலில் செல்லுங்கள்.” “இல்லையில்லை நீங்கள் முதலில் செல்லுங்கள்.”என்பது போல் இருவரும் பெருந்தன்மையுடன் தயங்கினர்.ஒரு வழியாக இன்று ராஜேஷ் 1000 மணி நேரத்தைக் கடந்தார். இன்றிரவோ நாளையோ சுரேஷ் பிரதீப்பும் இலக்கை அடைந்து விடுவார்.எனவே இருவருமே நம் வாழ்த்துகளுக்கு உரியவர்கள்.
@ சுனீல் கிருஷ்ணன் இதைத் தொடங்கும் போது சவால், போட்டி என்று சொன்னார்.சுரேஷும்,ராஜேஷும் இது இரண்டுமில்லை;ஜெயமோகன் சொன்னது போல் வாசிப்பு தவம்.இதில் முதலென்ன,முடிவென்ன? என்று அழகூட்டியுள்ளனர்.போட்டி என்று சொல்வதெல்லாம் ஒரு நடிப்பு தான்,பாவனை தான்.
@ இளம் எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் திட்டம் தொடங்கும் போது முதல் இடத்தில் இருந்தார். அலுவலகப் பணியோடு இலக்கியப் படைப்பு,உரை,திறனாய்வு என்று இவ்வளவு பரபரப்பில் வாசிப்பை இத்தனை தீவிரமாகத் தொடர்வது என்பது நாம் கற்கத் தகுந்தது. ஒரு முறை ஒரே நாளில் பன்னிரெண்டு மணி நேரம் வாசித்தார். அந்த அசுர சாதனையை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
@ ராஜேஷ் போட்டி தொடங்கியவுடன் இணைந்து விட்டார். என்றாலும் பின் நடுவில் கொஞ்சம் காணவில்லை.பின்னர் நிதானமாக தொடர்ந்து சீராக முன்னேறினார். நான்காவது வாசகராக இலக்கைக் கடந்துள்ளார். அவர் எழுத்தாளரா என்று எனக்குத் தெரியவில்லை. ஜெயமோகனின் வாசகராக இருப்பவர் எழுத்தாளராக இல்லாதிருப்பது கடினம். ராஜேஷிடம் எனக்குப் பிடித்தவை இரண்டு பண்புகள். ஒவ்வொருவரின் வெற்றிக்கும் வாழ்த்து தெரிவிப்பார்.பெறும் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவிப்பார். ஆட்டோ கார மாணிக்கம் போலவே ராஜேஷுக்கு இன்னொரு பெயர் உண்டு. பாலசுப்ரமணியன்.
@ எப்போதோ முடித்திருக்க வேண்டிய ராதாவும், சரவண குமாரும் பிறரும் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. யாரோ ஸ்டேச்சூ என்று சொன்னது போல. நிச்சயம் எல்லோரும் நிறைய வாசிக்கிறார்கள். பொதுவாக நம் தமிழ் மக்களுக்கு எதிலும் ஆவணம் பராமரிப்பதிலும், அதற்காக சிறிது மெனக்கெடுவதிலும் ஆர்வமின்மையும், சோம்பலும் உண்டு. இந்த அலட்சியத்தால் தேசிய அளவிலான வரை இழப்பு நேர்ந்திருக்கிறது. அதை மாற்ற முயல்வது நல்லது.
@ மூன்றாவது முறையாக எல்லோரையும் முந்திச் செல்லப் போகிறேன் என்ற இந்தக் கிழவரின் மிரட்டல்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாத இளைய போட்டியாளர்கள் என் பேத்தியின் வேகம் கண்டு வெருண்டு விரைவது நன்று. என் வாசகிப் பேத்தி–மதுமிதா! பத்தாமிடத்தில் உள்ள, தலைவர் போல எப்போதாவது எட்டிப் பார்க்கிற சுனீல் கடந்திருப்பது 392 மணி நேரம். நேற்று வந்த மதுமிதா இப்போது கடந்திருப்பது 377 மணி நேரம். அவர் வாசிக்கத் தொடங்கியிருப்பது ஜெயமோகனின் உலக சாதனையான வெண்முரசு காவியம்.இந்திர நீலம் நிறைவடையப் போகிறது.
@ குழுவில் உள்ள எல்லோரையும் ஊக்குவித்துக் கொண்டே இருப்பதற்கு ராமானுஜம் நன்றி தெரிவித்துள்ளார்.எங்கோ சொன்னதை மீண்டும் சொல்கிறேன்: வயது முதிர்ந்தவர்கள் எல்லோரையும் வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும். ஆசிரியர்கள் தகுதியுள்ள எல்லோரையும் பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டும். நான் இரண்டும். நான் அப்படி இல்லாவிட்டால் தான் தவறு.
@ வாசிப்பு மாரத்தனில் முதல் பத்து இடங்களில் உள்ளவர்கள்:
சாந்தமூர்த்தி ஜெகநாதன் …… 2739
அருண்மொழி நங்கை …….1000
லாவண்யா சுந்தர்ராஜன் …….1102
பாலசுப்ரமணியன்/
ராஜேஷ் …….1000
1.சுரேஷ் பிரதீப் ………996
2.V.ராதா ………800
3.சரவணகுமார் ………771
4.கமலாதேவி ………721
5.GSSV நவீன் ……..614
6.முத்துகிருஷ்ணன் ……. 526
7.ஜெயந்த் …….. 521
8.சௌந்தர்ராஜன் ……..452
9.வேங்கட பிரசாத் ……..410
10.சுனீல் கிருஷ்ணன் ……..392
தொடர்புடைய கட்டுரைகள்:
1.எனக்குத் தேவை இரண்டாமிடம் கூட அல்ல! https://wp.me/patmC2-3G
2.கரும்பு தின்னும் போட்டியில் முதல் பரிசு: https://wp.me/patmC2-5h
3.வாசிப்பு தவம் நிறைவு! https://wp.me/patmC2-5z
4.வாழ்த்துக்கள்,அருண்மொழி! https://wp.me/patmC2-eI